பயன்பாட்டுத் தமிழ்

Tuesday, May 02, 2006

உணவின் தீ அளவு தெரிந்துண்க

ஒரு கிராம் நீர். அதை ஒரு பாகை செல்சியசு உயர்த்த வேண்டும். அதற்கு எவ்வளவு தீ வேண்டும்? ஒரு குக்கலோரி தீ போதுமானது.
30 பாகை செல்சியசில் உள்ள ஒரு கிராம் நீரை 100 பாகை செல்சியசுக்கு உயர்த்தி நீராவியாக்க 70 குக்கலோரி தீ வேண்டும்.
தீயை அளக்கும் அலகு குக்கலோரி.
ஓராயிரம் குக்கலோரி தீ சேர்ந்தால், ஒரு கலோரி.
தீயின் அளவைப் பார்த்தோம். சத்தியின் வெளிப்பாடு தீ. வலிமையின் வெளிப்பாடு தீ. ஆற்றலின் வெளிப்பாடு தீ. அந்த ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
உணவில் இருந்து ஆற்றலை உடல் பெறுகிறது. உணவில் ஆற்றல் தோன்றாதிருக்கிறது. குடலுக்குள் போனதும் உணவு செரிமானமாகிறது. செரிமானமான பின்னர் உடலின் தேவைக்காகப் செரிமான உணவை மூச்சு வாயு உடைக்கிறது. ஆற்றல் வெளிவருகிறது. அந்த ஆற்றலே உயிரை வாழ்விக்கிறது.
உணவுக்குள் இருக்கும் தோன்றா ஆற்றலை மூச்சு வாயு உடைத்துத் தோன்றும் ஆற்றலைக் கொடுப்பதால் உயிர் வாழ்கிறது.
உயிர் வாழ ஆற்றல் தேவை. எனவே மூச்சு வாயு தேவை, உணவும் தேவை.
உணவில் உள்ள ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
தூங்கும் போதும் ஆற்றல் தேவை, உழைக்கும் போதும் ஆற்றல் தேவை. ஒவ்வொரு நிலையிலும் எவ்வெவ்வளவு ஆற்றல் தேவை என்பதைக் கணக்கிடலாம்; ஒரு மனிதருக்கு ஒரு மணி நேரத்துக்கு எத்தனை கலோரி ஆற்றல் தேவை எனக் கணக்கிடலாம்.
தூங்குகையில்... 80
உட்கார்ந்திருக்கையில்... 100
வீட்டு வேலைகளே செய்கையில்... 180
மெதுவாக நடக்கையில்... 220
வேகமாக நடக்கையில்... 480
ஓடுகையில்... 1000
மெதுவாக ஓடுகையில்... 600
மெதுவாக ஈருருளி ஓட்டுகையில்... 360
வேகமாக ஈருருளி ஓட்டுகையில்... 540
மெதுவாக நீந்துகையில்... 300
வேகமாக நீந்துகையில்... 400
பூப்பந்து விளையாடுகையில்.. 350
மேசைப் பந்து விளையாடுகையில்.. 360
இதற்கேற்ற உணவுதான் உயிர் வாழத் தேவை. எனவே நமக்குக் கிடைக்கும் உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை கலோரி இருக்கிறது எனத் தெரிந்து கொண்டால், அதற்கேற்ப அளவாக நாம் உணவை உட்கொண்டால், நலமாக உயிர் வாழலாம். ஒரு கிலோ உணவில் எத்தனை கலோரி எனத் தெரிந்தால் அதற்கமையத் தேர்ந்து சமைக்கலாம், உட்கொள்ளலாம்.
தானிய வகைகள் - அரிசி, கோதுமை போன்றன... 3,500
பருப்பு வகைகள் - துவரை, பயறு, மூக்குக் கடலை போன்றன... 3,500
காய்கறி - கத்தரி, வெண்டை, பாவல், அவரை போன்றன... 1,000
காய்கறி - கெக்கரி, தக்காளி போன்றன.. 200
காய்கறி - கீரை வகைகள்.. 300
பழங்கள் - 800
இறைச்சி வகைகள்.. 2,000
பால், பால் தரும் பொருள்கள்... 700
சமையல் எண்ணெய் வகைகள்... 9,000
உணவின் ஆற்றல் அளவுகளைக் கண்டோம். உயிர் வாழத் தேவையான ஆற்றல் அளவுகளையும் கண்டோம்.
அளவோடு உணவை உட்கொண்டால் வளமாக நலமாக வாழலாம்.
உணவில் உள்ள ஆற்றலின் அளவை, தீயின் அளவை, கலோரியின் அளவைத் தெரிந்து ஒருவர் உணவுண்ண வேண்டும். அந்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல், அளவுக்கு மேலாக ஒருவர் உணவை உட்கொண்டால், உணவுக் குழாயில், குருதி ஓட்டத்தில், இதயத்தில், சிறுநீரகத்தில், ஈரலில், உடலின் பிற உள்ளுறுப்புகளில் சம காலத்தில் நோய்கள் வரும். உடலின் எடை தேவைக்கு அதிகமாக உயரும்.
கலோரியின் அளவைத் தெரிந்து அளவோடு உண்ணுங்கள் என 2000ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பெருந்தகை கூறிச் சென்றுள்ளார். மேலே கூறிய மிக விளக்கமான அறிவியல் கொள்கையை இரண்டே வரிகளில், ஏழே ஏழு சீர்களுள் அடக்கி, குறள் வெண்பாவாகத் தந்துள்ளார்.
தீ அளவன்றித் தெரியான் - கலோரி அளவுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாது, பெரிதுண்ணின் - தேவையான கலோரிக்கு மேலாக உணவை உண்ணும் ஒருவர், நோயளவின்றி - உடலின் அனைத்து உறுப்புகளிலும் எண்ணற்ற நோய்கள் வந்து, படும் - துன்புறுவர், இறப்பர்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும் -குறள் 947

0 Comments:

Post a Comment

<< Home