பயன்பாட்டுத் தமிழ்

Wednesday, October 26, 2005

உலகத் தமிழருக்குப் பண்பாட்டுச் சாளரம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
செட்டிநாட்டுக்கு விழா ஒன்றுக்குப் போயிருந்தேன். திருமயத்துக்கு அருகே இராமச்சந்திரபுரத்தில் ஒரு வீட்டில் தங்கினேன். அது வீடல்ல, மாளிகை. இருபதுக்கும் அதிகமான அறைகள். நாற்சார முற்றங்கள் மூன்று. பல அடுக்களைகள். மாளிகையின் நான்கு சுவர்களும் நான்கு தெருக்களை ஒட்டி இருந்தன. மாளிகையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் இருந்தார். ஆண்டுக்கு ஒருமுறையே உரிமையாளரான நகரத்தார் இல்லத்தவர் அங்கு வருவார்களாம்.
யாழ்ப்பாணம் சிவன்கோயில் மேற்கு வீதியில் அரிசிமண்டி நடத்திய வணிகரான நகரத்தார் கட்டிய மாளிகையே அது. பர்மாவில் இருந்து அரிசியை இறக்கி இலங்கை முழுவதும் விற்பனை செய்தவர் அவ்வணிகர். மாளிகை மரவேலை முழுவதும் பர்மாத் தேக்கு. வரவேற்பு அறையின் அலங்காரம் முழுவதும் ஐரோப்பியக் கலைவண்ணம்.
செட்டிநாடு முழுவதுமே இத்தகைய பல மாளிகைகளைக் காணலாம். சைகோன், சிங்கப்பூர், பினாங்கு, ரங்கூன், மண்டலே, யாழ்ப்பாணம், கொழும்பு எனத் தென்கிழக்காசியாவின் வணிகத்தில் பல நூற்றாண்டுகாலமாகப் பங்காற்றி வருபவர்கள் நகரத்தார்கள்.
அவர்கள் கொணர்ந்த செல்வமும் சொத்தும் அயலகப் பழக்க வழக்கங்களும் ஏராளம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் எனத் தொடங்கிக் கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், திருக்கோயில் திருப்பணிகள் எனப் பல்துறை அறக் கொடைகளால் தமிழகம் பயன்பெற்றது. மாதாந்த உண்டியல் வருகையால் பல குடும்பங்கள் செழித்தன.
முப்பது பழந்தமிழ் நூல்களைத் தனிஒருவரின் முயற்சியாகப் பதிப்பித்த ஆறுமுக நாவலரும், தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்ட 11 நூல்களை முதன்முதலில் அச்சுவாகனம் ஏற்றிய சி. வை. தாமோதரனாரும் தமிழகத்தின் பண்பாட்டுச் செல்வத்துக்குக் காலந்தோறும் உரமூட்டி வருவோர் வழிவந்த ஈழத் தமிழ் மரபினர். சிங்கப்பூர் கோவிந்தசாமியும் மலேஷிய முரசு மாறனும் யாழன் சண்முகலிங்கமும் கணிப்பொறித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பால் தமிழகம் பயன்பெற்று வருகிறது.
நகரத்தாரின் நீண்ட காலப் புலம்பெயர் வணிகம், ஆங்கிலேயர் காலத் தமிழ்த் தொழிலாளர் புலம்பெயர்வுகள், எண்ணெய்ச் செல்வம் ஈர்த்த அண்மைக் காலத் தமிழர் புலம்பெயர்வுகள், ஈழப்போரினால் அகதிகளாய்ப் புலம் பெயர்வுகள் யாவும் திரைகடலோடித் திரவியம் தேடிவர வழிவகுத்தன.
தமிழகக் கரைகளுக்கு வெளியே தமிழர் தொடர்ந்தும் தமிழராக வாழ்வது எளிதானதல்ல. மலாக்காச் செட்டிகளும், கொழும்புச் செட்டிகளும் தமிழை மறந்து, தமிழராக வாழ்வதை மறந்து, புகுந்த மண்ணுடனும் பண்பாட்டுடனும் ஐக்கியமாகினர். பிஜி, மொரிசியசு, தென் ஆபிரிக்கா, சீசெல்சு, பிரான்சு, இறியுனியன், சுரிநாம், ஆகிய நாடுகளுக்கு ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் அழைத்துச் சென்ற தமிழர், தமிழ் மொழியைப் பேச எழுத மறந்த தமிழராக வாழ்ந்து வருகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குக் ஆங்கிலேயருடன் சென்ற தமிழர் மட்டும் தமிழை மறக்காமல் பண்பாட்டையும் மறக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அண்மைக் காலங்களில் ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் புலம்பெயர்ந்த தமிழக, மற்றும் ஈழத் தமிழர்களின் சந்ததியினர் தமிழர்களாகத் தொடர்வார்களா? அன்றி அந்தந்த மண்ணுடன் ஐக்கியமாகிவிடுவார்களா? இதைக் காலம் தான் உணர்த்தும்.
தம் தாய் நாட்டை விட்டுப் புலம்பெயர்பவர்கள் தமிழர் மட்டும்தான் அல்ல. கடந்த 500 ஆண்டுகளில் அதிகம் புலம்பெயர்ந்தவர்கள் அராபியர்களும் ஐரோப்பியர்களுமே. வணிகத்துக்காவும் நாடு பிடிக்கவும் இவர்கள் கடலாடினர்
தங்கள் மொழிகளையும் மரபுகளையும் எடுத்துச் சென்ற இவர்கள், சென்ற இடங்களில் அவற்றைப் பேணியதுடன் மற்றவர்கள் மீதும் திணித்தார்கள். 58 நாடுகளில் ஆங்கிலம் வழங்குகிறது. 46 நாடுகளில் பிரஞ்சு வழங்குகிறது. 24 நாடுகளில் ஸ்பானிய மொழி வழங்குகிறது. 24 நாடுகளில் அரபுமொழி வழங்குகிறது. டானிஷ், டச்சு, இத்தாலி, போத்துக்கேயம் ஆகியவை சில நாடுகளில் வழங்குகின்றன.
அடையாள உணர்வுத் தேடலுக்கும் பாதுகாப்புக்கும் மொழியும் பண்பாடும் முக்கியம் என்பதால், புலம்பெயர்ந்து வாழும் அமெரிக்க, ஐரோப்பியரைத் தத்தம் தாய்ப்பண்பாட்டுடன் ஈர்த்துப் பிணித்து வைக்கவும், சேர்ந்த நாட்டின் பண்பாட்டுடன் ஐக்கியமாகி விடாமல் இருக்கவும் ஐரோப்பிய அரசுகளின் சிறந்த அடித்தள அமைப்புகள் செயற்படுகின்றன.
தமிழர் விட்டு வந்த மலாக்காச் செட்டிகள் போன்றோரே ஆங்கிலோ இந்தியர். இத்தகைய கலப்பினர் பல நாடுகளில் உளர். எனினும் அவர்கள் ஐரோப்பிய மொழி-பண்பாட்டினைத் தொடரத் தேவையான அமைப்புகளை ஐரோப்பிய அரசுகள் அமைத்துள.
அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், அமெரிக்கத் தகவல் நடுவம், பிரிட்டிஷ் கவுன்சில், போன்ற அமைப்புகள் உலகெங்கும் உள்ளன. அவை இல்லாத நாடுகளில் அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அப்பணியைச் செய்கின்றன.
ஏடனில் நான் தங்கியிருந்தபொழுது பிரிட்டிஷ் தூதரகம், தம் நூலகத்தைப் பயன்படுத்துமாறும், வாரம் ஒருநாள் இலண்டனில் இருந்து வரும் திரைப்படத்தைப் பார்க்க வருமாறும் நிலையான அழைப்பை எனக்குத் தந்ததற்கு ஒரே காரணம் நான் ஆங்கிலமொழியைத் தெரிந்தவன் என்பதுதான். ஏனெனில் ஏடனில் அப்பொழுது கம்யூனிச அரசு இருந்தது. ஆங்கிலப் படங்களை வெளியே பார்க்க முடியாது. அங்குள்ள ஆங்கிலேயர், அமெரிக்கர், ஆங்கிலம் தெரிந்த ஆபிரிக்கர், ஆகியோர் பார்க்கும் வசதிக்காக, பிரிட்டிஷ் அரசு வாரம் தோறும் ஆங்கிலத் திரைப்படம் ஒன்றை விமானத்தில் அனுப்பும், இலண்டனில் வெளியாகும் நாளிதழ்கள், செய்தி இதழ்கள், நூல்கள் ஆகியவற்றையும் பிரிட்டிஷ் அரசு அனுப்பும்.
ஆங்கிலேயர் எங்கு புலம்பெயர்ந்தாலும் ஆங்கில மொழி - பண்பாட்டுடன் வாழ்வதையும் அடையாள உணர்வு போய்விடாமல் பாதுகாப்பதையும் தனது கடமையாக பிரிட்டிஷ் அரசு நினைப்பதன் நீட்டமே பிரிட்டிஷ் கவுன்சிலின் அமைப்பும் செயற்பாடும். பிரஞ்சுக்காரர் எங்கிருந்தாலும் பிரஞ்சுக்காரராகத் தொடரவேண்டும் என்ற பிரஞ்சு அரசின் கடமை உணர்வின் வெளிப்பாடே அல்லயன்ஸ் பிரஞ்சைஸ் அமைப்பும் செயற்படும். ஜெர்மானிய, டச்சு, இத்தாலிய டானிஷ் போர்த்துக்கேய அரசுகளும் இத்தகைய அமைப்புகளைப் பிற நாடுகளில் அமைத்துள.
புலம்பெயர்ந்த தமிழர்கள், புகுந்த நாடுகளில் தமிழராகத் தொடர்வதை ஆதரிக்க வேண்டும் என்ற கண்டோட்டம் தமிழ்நாட்டில் குறைவு. கலைக்குழு வேண்டுமெனில், பயணச்சீட்டுடன் உணவு உறையுளையும் சம்பளத்தையும் வெளிநாட்டுத் தமிழர் கொடுக்கவேண்டும், தமிழ் நூல்களை விலைகொடுத்து வாங்கவேண்டும்.
1968இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கும் பின்னர்தான் தமிழக அரசு மட்டத்தில், அயலகத் தமிழர் பற்றிய புரிந்துணர்வு ஏற்படத் தொடங்கியது. சிறு சிறு முயற்சிகளாக அப்புரிந்துணர்வு வெளிப்பட்டது.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பிஜித்தமிழருக்குத் தமிழ் கற்பிக்கப் பாடத்திட்டம் வகுத்து உதவியதுடன் தமிழ் நூல்களை அச்சிட்டு வழங்கியது. மொரிசியசு சென்று வந்த அந்நாள் அமைச்சர் இராசாராம் அந்நாட்டுக்குத் தமிழ் நூல்களை அனுப்பினார். அண்மையில் அங்கு இசை ஆசிரியர் ஒருவரை ஓராண்டுக்கு அனுப்பியிருந்தது தமிழக அரசு. ஈழத்துத் திருக்கேதீச்சரத் திருப்பணிக்குத் தமிழக அரசு கல்தூண்கள் அமைத்துக் கொடுத்தது. கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்குத் தமிழ் நூல்களைத் தமிழக அரசு வழங்கியது. உலகத் தமிழாராய்ச்சியாளரை இணைக்க அனைத்துலகத் தமிழாராரய்ச்சி நிறுவனமும், உலகத் தமிழரை இணைக்க உலகத் தமிழ்ச் சங்கமும் அமைந்தன. தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழருக்காகத் தமிழ் மொழிப் பயிற்சி வகுப்புகளை நடாத்தியது. சென்னை, திருநெல்வேலிப் பல்கலைக் கழகங்கள் உலகத் தமிழருக்கு அஞ்சல்வழிக் கல்வியை அறிமுகம் செய்தன. மருத்துவம் மற்றும் தொழில் நுட்பக் கல்விகளில் உலகத் தமிழருக்கு இடஒதுக்கீடுகள் அமைந்தன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இவ்வழி முயற்சியே.
அரசு சாரா முயற்சிகளாக, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம், உலகத் தமிழர் மையம் பேன்றவை அமைந்து தமிழகத்துக்கும் உலகத் தமிழருக்கும் இடையே உறவுப்பாலங்கள் அமைத்தன. மார்கழியில் சென்னையில் உலகத் தமிழ்க் கலைஞர்களுக்காகத் தனியாக இசை நடன விழா அமைந்து வருகிறது.
பாலைவனத்தில் பசுஞ்சோலைகளாக இடையிடையே இவை தெரிந்தாலும் உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பு எதையும் தமிழக அரசு நிறுவவில்லை. உலகத் தமிழச் சங்கம் உயிர் பெறவேயில்லை. அல்லயன்ஸ் பிரஞ்சைஸ், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற பண்பாட்டுச் சாளரம் ஒன்றைத் தமிழக அரசு அமைக்கவில்லை.
ஓர் இலட்சம் தமிழருக்கு மேல் வாழும் பிஜி, மொரிசியசு, இறியுனியன், தென்ஆபிரிக்கா, பர்மா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, எமிரேட்ஸ், இலங்கை ஆகிய பத்து நாடுகளிலும் பத்துத் தமிழ்ச் சாளரங்களை அமைக்க இதுவே நல்ல சூழ்நிலை. அச்சாளரங்கள் வழி தமிழ்த் தென்றல் அந்த நாடுகளுக்குள் வீசும். தமிழகத்தில் வெளிவரும் நாளிதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள், ஒலி ஒளி நாடாக்கள் அம்மையங்களில் தவழவேண்டும். தமிழ்நாட்டைப் பற்றிய சுற்றுலா, கல்வி, மருத்துவத் தகவல்கள் அங்கு சேரவேண்டும். அந்நாட்டுத் தமிழர் தமிழகத்துடன் தொடர்பு கொள்ளவும் தமிழகத் தமிழர் அந்நாட்டுத் தமிழருடன் உறவு கொள்ளவும் இப்பண்பாட்டுப் பலகனி பாலமாக அமையும். கலைக்குழுக்களையும் ஒவியர், எழுத்தாளர், தமிழ்க்கணிப்பொறி வல்லுனர்களையும் அந்நாடுகளுக்கு அனுப்ப இச்சாளரம் பயன்படும். தமிழ்க் கலைச்சொல் சீர்மை, கணிப்பொறித் தமிழ் வளர்ச்சி, தமிழ் இலக்கணச் சீர்மை போன்ற தமிழ் வளர்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைக்க இச்சாளரம் உதவும்
இலங்கையில் ஆட்சி மொழி, சிங்கப்பூரில் தேசிய மொழி, மலேசியாவிலும் மொரிசியசிலும் பிஜியிலும் பாடமொழி எனப் பரந்து பயனுறுத்தி வரும் மொழியாகத் தமிழ் இருப்பதால், உலகத் தமிழர் தத்தம் பண்பாட்டு அடையாளங்களைப் பேண, உள்ளகக் கட்டமைப்புள்ள தொடர்ச்சியான அமைப்பை ஏற்படுத்துவதே தமிழகத்தின் தொப்புட் கொடிக் கடமையாகும்.
திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழரால் தமிழகம் பெற்ற நன்மைகளுக்கு ஈடாக, இன்றைய உலகமயமயாக்கச் சூழலில் தமிழகம் உலகத் தமிழருக்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமைகளுள் இதுவுமொன்றாகும்.

தமிழ் படித்தோருக்கு வேலை வாய்ப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கணினியியலில் தேர்ச்சி; உடனே வேலை வாய்ப்பு. மருத்துவத்தில் தேர்ச்சி; வருவாய்க்குக் குறைவில்லை. சோதிடத்தில் பயிற்சி; 93 வயதான சோதிடர் வரதன் கொடுக்கும் நன்கொடைகளே அத்துறையின் செழிப்புக்குச் சாட்சி. பொறியியல், உயிரியல், வேதியியல் என நீளும் அறிவியல் துறைகளில் பட்டமும், பயிற்சியும் பெற்றவர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிப்பது குறைவு. வணிகப் படிப்பில் சேர இருக்கும் போட்டியே அதன் வருவாய்ச் செழிப்பின் அளவுகோல்.
வருவாய் மட்டுமல்ல, சமூகத்தின் மதிப்பு, நாட்டின் எல்லைகளைக் கடந்து மனித சமுதாயத்தின் கூட்டு வளர்ச்சிக்குப் பங்காற்றினோம் என்ற மன நிறைவு, இவை யாவும் மேற்கூறிய துறைகளில் பயின்றோருக்குக் கிடைக்கிறது.
ஆனால், பட்டப் படிப்புகளைத் தமிழ் மொழியியலிலும் தமிழ் இலக்கியத்திலும் அனைத்து மட்டத்திலும் பயின்றோர் வருவாய்க் குறைவால் வாடுகின்றனர். அத்தகையோருக்காகச் சங்கம் ஒன்றே இயங்கி வருகிறது; வேலைவாய்ப்புகளைப் பல்வேறு நிலைகளில் உருவாக்க முயல்கிறது; அவர்களின் முன்னேற்றத்துக்கான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகிறது.
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கணிதத்தில் புலி. பட்டப் புகுநிலையில் கணிதத்தைப் பாடமாகப் படித்தவர்; தந்தையாரின் தமிழ்ச் சூழல் பட்டப் படிப்புக்குத் தமிழைப் பாடமாகக் கொள்ள இவருக்கு ஆர்வத்தைத் தந்தது. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இவரைப்போல் தமிழைப் படிக்க வருவோர் மிகக் குறைவு.
வேறு துறைகளில் இடம் கிடைக்காதவர்களே பெரும்பாலும் தமிழைப் பாடமாகப் படிக்க வருகின்றனர். வடிகட்டலில் கடைநிலையில் உள்ளோர், இருக்கவே இருக்கிறது தமிழ் எனக் கருதித் தமிழைப் பாடமாகக் கொள்கின்றனர்.
தமிழைப் பாடமாகப் படித்தோரிடையே வேலைவாய்ப்புக் குறைவுக்கான காரணங்கள்:
வேறுவழியின்றித் தமிழுக்கு வந்தோர், தமிழ்ப் பட்டதாரிகளாக, புலவர்களாக வெளிவருகின்றனர். வேலைவாய்ப்புப் போட்டியிலும் பிற துறையாளர் போல் இவர்களால் முன்னிற்க முடிவதில்லை.
வளர்ச்சிக்கு உரிய கருவியாக, தொடர்புக்கு உரிய வாகனமாகத் தமிழ் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டமில்லாப் பாடத்திட்டங்கள் மலிந்த கல்விச் சூழ்நிலை.
தமிழைப் பாடமாகப் படித்தவர்களை எங்கெங்கெல்லாம் பணிகொள்ளலாம் என்ற கருத்தோட்டமற்ற சமூக அமைப்பு.
தமிழைப் பாடமாகப் படித்துவிட்டு, கடந்த நாற்பது ஆண்டு காலப்பகுதியில் பணிக்குச் சேர்ந்த பெரும்பாலோரின் பணிச் சோர்வு.
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியையே தமிழர் பயனுறுத்த வேண்டும் என்ற கொள்கையற்ற சூழ்நியைில், பிறமொழிகளை வாழ்வுடன் இணைக்காமல் தமிழர் வாழ்வு முழுமை பெறாது என்ற பிறழ்ச்சிச் சிந்தனையாளரின் உள்ளீடுகள் சமூகத்தின் நச்சு வேராகியதால், தமிழைப் பாடமாகப் படித்தோர் தாழ்நிலையினரென்ற கருத்துருவாக்கம்.
தமிழைப் பாடமாகப் படிப்போருக்குரிய புகழ் + வருவாய் இலக்குகளான பட்டிமன்ற மேடைகள், பேச்சு மேடைகள், ஒலி-ஒளி-அச்சு ஊடக வெளிப்பாடுகள் யாவிலும் தமிழரின் பண்டைய பெருமைபேசி அரைத்த மாவை அரைப்பதில் யார் தம்முள் வல்லவர் என்ற பொறாமை மிகு போட்டிச் சூழல்.
தமிழைப் பாடமாகப் படித்தோரின் வேலைவாய்ப்பைப் பெருக்கச் செய்யவேண்டியன:
தொடக்கப் பள்ளிகளில் அறிவியல் தமிழ் என்ற பாடநூலைத் தமிழக அரசு அறிமுகம் செய்துளது. சென்னைப் பல்கலைக் கழகக் கலையியல் இளவல் பட்டத்துக்குத் தமிழைப் பாடமாகப் பயில்வோர் பயன்பாட்டுத் தமிழ் என்ற நூலைக் கட்டாயமாகப் படிக்கும் நிலை வந்துளது. இவை என் கவனத்துக்கு வந்தவை. இத்துறையில் வேறு முயற்சிகளும் இருக்கக் கூடும். வளர்ச்சிக்குரிய கருவியாகத் தமிழ் மொழியை எடுத்துச் செல்ல இத்தகைய பாடத்திட்டச் சீராக்க முயற்சிகளைத் திட்டமிட்டு வேகமாக முன்னெடுக்க வேண்டும். தமிழைப் பாடமாகப் படிப்போரின் கண்ணோட்ட மாற்றத்துக்குப் பாடத்திட்டச் சீராக்கமே வழிகாட்டி. வளர்ச்சிக்கும் தொடர்புக்கும் உரிய மொழியாகத் தமிழை எடுத்துச் செல்லத் தமிழைப் பாடமாகப் படித்தோரே பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுவர்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பொங்கு தமிழ் என்பன முழக்கங்களாவே நின்றுவிடுகின்றன. துறைதொறும் துறைதொறும் தமிழ் வழங்கும் நிலை வருமாயின், ஒவ்வொரு துறையிலும் தமிழைப் பாடமாகப் படித்தோரின் துணை தேவையாகும். அவ்வத் துறைகளுள் உள்ளோர் ஒவ்வொருவரும் மொழி வல்லுநராக இருப்பது அரிது. கணக்காளர் இருப்பதுபோல, ஆவணக் காப்பாளர் இருப்பது போல, களஞ்சியக் காப்பாளர் இருப்பது போல, ஒவ்வொரு துறையிலும் தமிழ்மொழிக் காப்பாளர் இருப்பர். தொடர் வண்டிகளில் எக்ஸ்பிரஸ் வராது; பேருந்துகளில் 29அ வராது; இதழ்களில் இந்தியா டுடே வராது; திரைகளில் தேவதையை(?) கண்டேன் வராது; தொலைக்காட்சியும் வானொலியும் ஆடுகள் வந்தது எனப் பேசா; அறிவியலாளர், வணிக மேலாளர், பெயர்ப்பலகை எழுதுவோர் தமிழ்ச் சொற்களைத் தூக்கி எறியார்.
தமிழாசிரியராக, எழுத்தாளராக, இதழாளராக, மெய்ப்பாளராக, பேச்சாளராக மட்டுமே வேலை தேடும், தமிழைப் பாடமாகப் படித்தோரைத் தமிழ் மொழி வளர்ச்சியாளராகப் பார்க்கின்ற சமூகக் கண்ணோட்டத்தை உருவாக்கினால், அவர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும். முன்பு அப்படித்தான் இருந்தது; சங்கம் அமைப்பவரோ, கடை தொடங்குபவரோ, அவ்வமைப்புக்குப் பெயர் வைக்க முதலில் தேடுவது தமிழ்மொழி அறிஞரையே. இன்று அவரவர் தனக்குத் தெரிந்தவாறு பெயர் வைக்க முற்படுவதால் போராட்டங்கள் வெடிக்கின்றன. சோதிடரை நாடும் மூடப் பழக்கத்தை விடாத சமூகம், தமிழ் மொழி அறிஞரை நாடும் நல்ல பழக்கத்தைக் கைவிட்டதே!
தமிழைப் பாடமாகப் படித்தவருள் பெரும்பாலோர் போதுமான தமிழ் மொழிப் புலமையாளராக இல்லாதிருப்பதால் பணியிடங்களில் திறமையுடன் மிளிரமுடியவில்லை. வடிகட்டலில் கடைநிலையாரை மட்டுமே ஈர்க்காமல், போக்கற்றவர்களின் புகலிடமாகத் தமிழ்ப் பாடப்யிற்சி அமையாமல், திறமைசாலிகளை மாணவர்களாக ஈர்க்கும் நிலை வரின், தமிழைப் பாடமாகப் படித்தோருக்கு வேலைவாய்ப்புப் பெருகும்.
இந்திய மாநில மொழிகள், தென்கிழக்காசிய மொழிகள், மேற்காசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய மொழிகள் இவற்றுள் ஒன்றையேனும் தமிழுடன் சேர்த்துப் பயிலவேண்டிய கட்டாயம் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு உண்டு. திணித்தால் கற்போம் என்ற உளப்பாங்கை மாற்றி, விரும்பிக் கற்கும் நிலை வந்தால், தமிழர் வாழாத மாநிலங்களிலும் நாடுகளிலும் மொழிபெயர்ப்பாளராகத் தமிழைப் பாடமாகக் கற்றோருக்கு வேலைவாய்ப்புண்டு.
தமிழ் தெரியாதோருக்குத் தமிழ் கற்பிக்கும் திறனை வளர்க்கும் பாடத்திட்டத்தைத் தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வகுத்தால், உலகின் 85 நாடுகளில் பரந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கும், தமிழ்மொழி மீது காதல் கொண்டு பயில விரும்பும் பிற மொழியாருக்கும் தமிழ்மொழி கற்பிக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும்.
எழுத்தும் அச்சும் தகவல் பரிமாற்றமும் வேகமாக வளர்கையில், மொழி வல்லுனர்களின் தேவை அதிகரிக்கும். ஒவ்வொரு துறையிலும் அவ்வத் துறைபோகியோர், தத்தம் கருத்துகளை, நிகழ்வுகளை, எழுதியபின் மொழி வல்லுநர் ஒருவரின் பார்வைக்கு அனுப்பும் காலம் வரும். தமிழைப் பாடமாகப் படித்தோருக்குப் பதிப்பாசிரியர் பணி அங்கு காத்திருக்கும்; மொழியில் மட்டுமல்ல, பதிப்பு ஒழுங்கிலும், மெய்ப்புப் பார்ப்பதிலும் வல்லுநராகித் தமிழைப் பாடமாகப் படித்தோர் வேலை பெறுவர்.
அறிவியலும் தொழினுட்பமும் வேகமாக வளர்கையில் புதுப் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும்; தொடர்களைக் குறுக்கங்களாக்க வேண்டும். மொழிப் புலமை, வேர்ச் சொற்களிற் புலமை, வேர்களுடன் விழுதுகளைச் சேர்த்துப் புதுச் சொற்களை உருவாக்கும் திறமை, தமிழ்த் தொடர்களுக்கு ஒலிஇயைந்த குறுக்கங்களை உடனுக்குடன் ஆக்குந் திறமை உடையோருக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
கவர்ச்சியான தமிழ்த் தொடர்களை எழுதுவோருக்கு விளம்பர நிறுவனங்கள் செழிப்பான பணமுடிப்பு வழங்குகின்றன. விளம்பரமில்லாத உற்பத்தி வெல்லாது; உற்பத்தியில்லாத பொருண்மியம் உதவாது; கவர்ச்சித் தொடரில்லா விளம்பரத்தால் விற்பனை பெருகாது; தமிழில்லாமல் பொருண்மியமே வளராது. எனவே புலமைத் தமிழ் மொழியாளரைத் தேடுகின்றன விளம்பர நிறுவனங்கள்.
தமிழில்லாமல் வாழ்வில்லை என்ற சூழ்நிலையை நோக்கித் தமிழர் முன்னேறுகையில் தமிழைப் பாடமாகப் படித்தோருக்கான வேலைவாய்ப்புகள் அளவுக்கதிகமாகவே வரப்போகின்றன. அரைத்த மாவை அரைப்போரை உருவாக்கும் பாடத்திட்டங்களை மாற்றி, தமிழை வளர்ச்சிக்குரிய மொழியா மாற்றும் பாட்த்திட்டங்களே, தமிழைப் பாடமாகக் கொள்வோருக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கும்.

வள்ளலார் கடிதங்கள்: மதிப்புரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆங்கிலேயர் ஆட்சியின் உச்ச காலங்களில் தமிழ்நாட்டில் அன்புமழை பொழிந்துகொண்டிருந்த ஆன்மீக வள்ளலாரின் 87 கடிதங்களை ஆ. பாலகிருஷ்ணபிள்ளை தொகுத்து 124 பக்கங்களில் தமிழுலகுக்குத் தந்துள்ளார்.
கி.பி. 1923இல் பிறந்து 51 ஆண்டுகள் வாழ்ந்து கி. பி. 1873இல் மறைந்தவர். சிதம்பரம் இராமலிங்கம் எனத் தன்னை அழைக்குமாறு கேட்டுக் கொண்டவர் வள்ளலார்.
நாயக்கர் காலத்தில் தமிழுள் விரவிய வடமொழிச் சொற்களின் இடத்தைப் படிப்படியாக ஆங்கிலச் சொற்கள் நிரப்பி வந்த அக்கால வழக்கையொட்டி வள்ளலாரின் 74 உரைநடைக் கடிதங்களில் ஆங்கில மொழி, வடமொழி மற்றும் உருதுமொழிச் சொற்கலப்பு உள்ளது. 13 செய்யுள்நடைத் திருமுகங்களில் நாயக்கர் கால மரபை ஒட்டி வடமொழிச் சொற்கலப்பு உள்ளது.
ஓட்டல், லாங்கிளாத்து பீசு, ரிஜிஸ்டர், கலக்டர், இஸ்கூல், ரயிட்டர் (ரைட்டர்), ராயல் போன்ற ஆங்கிலச் சொற்கள் தமிழுள் வந்து 150 ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்பதை இக்கடிதங்கள் வாயிலாக அறியலாம். மெய்யெழுத்தில் சொற்கள் தொடங்காதென்பதால் இஸ்கூல் என்றார். கிளாத் என மெய்யீறு வராதென்பதால் கிளாத்து என்றார்.
ஜில்லா போன்ற உருதுச்சொற்களையும் வள்ளலார் எடுத்தாண்டுளார்.
திர்ப்த்தி, வையாசி போன்று பல வடமொழிச்சொற்கள், தமிழில் வள்ளலார் எழுத்துக் கூட்டியவாறே உள்ளனவா அல்லது படியெடுத்தவரின் எழுத்துக்கூட்டலா தெரியவில்லை.
வள்ளலாருக்கு மிக நெருங்கியவராக இறுக்கம் இரத்தினமுதலியார் இருந்தார். அவருக்கு எழுதிய 37 கடிதங்கள் இத்தொகுப்பில் உள. வள்ளலாரும் இரத்தின முதலியாரும் ஒருவர்மீது ஒருவர் மதிப்பும் அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். இரத்தின முதலியாரின் நலம் பற்றி வள்ளலார் அதிக ஆர்வம் காட்டினார். வள்ளலாரின் பாடல்களை வெளியிட விரும்பிய இரத்தின முதலியார், அப்பாடல்களை வள்ளலாரிடம் இருந்து பெறுவதற்காகத் தவப்பழி கிடந்தார். ஒருவேளை மட்டும் உண்டார். இதைப்பொறாத வள்ளலார் தவப்பழியைக் கைவிடுமாறு முதலியாரிடம் இரந்தார். இதுபேன்று பல நிகழ்வுகளில் இருவரிடையே இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துவதை இக்கடிதங்கள் காட்டுகின்றன.
வேலு முதலியார், சுந்தரப்பிள்ளை, திருவேங்கடமுதலியார், சோமுச்செட்டியார், நாயக்கர் எனப் பலர் வள்ளலாருக்கும் இரத்தின முதலியாருக்கும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் குருவாக இராமலிங்க சுவாமியைக் கொண்டனர். ஆனால் அவரோ, `இராமலிங்க சாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை? ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்' என அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கடிதம் எழுதினார். தனது நட்புக்குரியவரின் குடும்பத்தவரை அன்போடு விசாரிக்கும் வரிகள் வள்ளலாரின் கடிதங்களில் உள.
புதுவை வேலு முதலியாருக்கு எழுதிய 6 கடிதங்களும், நயினார் ராமசாமி, பொன்னுசாமிப்பிள்ளை, சபாபதி சிவாச்சாரியார் ஆகியோருக்கு எழுதிய 5 கடிதங்களும் இத்தொகுப்பில் உள.
சமூக அழுத்தங்களுக்கு வள்ளலார் மதிப்பளித்தார். கடமைகசை் சரிவரச் செய்யாமல்விடின் தான் நிந்தனைக்குள்ளாகவேண்டுமென அவர் எழுதினார். நிந்தனை வராமலிருக்கும் உபாயங்களை மேற்கொண்டார்.
துன்புற்றவர்களுக்கு ஆறுதல் தருவதைத் தன் முதற் கடமையாக்கினார். சிவசிந்தனை, ஜீவகாருண்ணியம் ஆகிய இரு வழிகளையும் கடிதங்களில் வலியுறுத்தினார். பல ஊர்களில் தவச்சாலைகளும் அன்னதான நிலையங்களும் அமைக்க விரும்பினார். அதற்காகப் பயணங்கள் மேற்கொண்டார்.
பயணகாலங்களில் உடல்நலிவுற்றார். அவருக்கு மருத்துவம் தெரிந்திருந்தது. நண்பர்களுக்கு மூலிகை மருத்துவ ஆலோசனைகளைக் கடிதங்களில் எழுதினார்.
தருமச்சாலைகள் அமைத்துத் தொடங்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பினார். சன்மார்க்க விவேக விருத்தி என்ற இதழைத் தொடங்க நிதி அளித்தோர் பட்டியலும் இத்தொகுப்பில் உளது. தான்பெற்ற அற்புத அறிவுபற்றிக் குறிப்பிடும் சபை விளம்பரம், சமரச வேத பாடசாலைக்கான அறிவிப்பு, அற்புதம் நடைபெறவுள்ளதான வதந்தியை மறுத்த சித்தி வளாக விளம்பரம் உள்ளிட்ட 8 அறிவிக்கைகள் இந்தத் தொகுப்பில் உள.
வள்ளலாரின் இறுதி 3 ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற 9 கட்டளைகளும் இதில் உள. இறந்தவரை எரிக்காமற் புதைக்க வேண்டும் என்ற கட்டளையும், இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக்கொடுத்துத் தந்தையார் உபகாரம் செய்வர், நம்பிக்கையுடனிருங்கள் என்ற கட்டளையும், சுத்த சிவ சன்மார்க்கமே உலகில் இனி வழங்கும் என்ற கட்டளையும், சபை வழிபாட்டு விதிக்கட்டளையும், அவரவர் வழிபாட்டுமுறையை அவரவர் செய்யுமாறும் அதை மற்றவர் தடைசெய்யாதிருக்குமாறும் குரோதங்களை உடனுக்குடன் மறந்துவிடவேண்டும் என்னும் கட்டளையும், சிற்சபையிற் புகுந் தருணமிதுவே என 1873 கார்த்திகையில் எழுதிய கட்டளையும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள.
இந்நூலின் தொடக்கத்தில் பொருளடக்கம் அமைந்திருப்பின் வாசகருக்கு உதவியிருக்கும். கடிதங்கள் பலவற்றின் காலத்தைக் குறிக்காதமை போதிய தகவலைத் தொகுப்பாசிரியர் பெறமுடியாமையையே காட்டுகிறது. 150 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை மேலும் ஆராய்ந்து கால வரிசைக்குள் கொணர்தல் அவசியம். வள்ளலாரை அதிகம் தெரியாதவர்களுக்காகத் தொகுப்பாசிரியர் அறிமுக முன்னுரையை எழுதியிருக்கலாம். அதை ஓரளவு ஈடுசெயும் வகையான் பேரா. வீ. அரசு எழுதிய முன்னுரை அமைந்துளது.
அக்கால சமூக, பொருளாதார, ஆட்சி, போக்குவரத்து, அஞ்சல் அமைப்புகளின் கண்ணாடியாக உள்ள இந்நூலை அனைத்துச் சமயநெறியில் உள்ள தமிழ் தெரிந்தவர்களும் படிப்பார்களாயின், அன்புநெறியையே பொதுநெறியாகத் தமிழகம் நெடுங்காலமாகப் பல்வேறு வழிகாட்டிகள் மூலம் பேணி வந்ததன் பாங்கை வள்ளலாரின் காலக்கண்களூடாகத் தெரிந்துகொள்வர். வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்நூல் அரிய களஞ்சியம்.


1.10.2002