பயன்பாட்டுத் தமிழ்

Tuesday, May 02, 2006

ஓர் அடிமையின் வரலாறு

விழிப்புணர்வுக்காக மதிப்புரை எழுதியவர்:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பிரடெரிக்கு டக்கிளசு
தமிழினி வெளியீடு
176 பக்கங்கள், ரூ. 50
குட்டக் குட்டக் குனிபவன் மடையன் என்ற பழமொழிக்கமைய அடிமை கொள்ளும் முயற்சியை அதே வேகத்துடன் எதிர்க்கும் விடுதலைக் குரல்களும் இடைவிடாது ஒலிக்கின்றன.
உரிமைக்குப் பால் பேதமில்லை,
உண்மைக்கு நிறமில்லை
கடவுளின் குழந்தைகளான நாம் அனைவரும் உடன்பிறப்புகளே;
என்ற முகப்பு வரிகளுடன் கி.பி. 1847இல் அமெரிக்க மாநிலம் ஓன்றிலிருந்த வந்த இதழ் நோர்த் ஸ்ரார். இந்த இதழைத் தொடங்கி நடத்தியவர் பிரடெரிக்கு டக்கிளசு என்ற விடுதலைப் போராளி.
கி.பி. 1619 முதலாக வட அமெரிக்கக் கண்டத்தில் மனிதரை மனிதருக்கு அடிமையாக்குவது வழமையாயிற்று.
கி. பி. 1862இல் அடிமைகளின் விடுதலை அறிக்கையை அந்நாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் வெளியிடும் வரை, ஏறத்தாழ 250 ஆண்டுகள், சட்டபூர்வ அடிமைகளாக மனிதர், வட அமெரிக்காவில், சிறப்பாக அதன் தெற்கத்தைய மாநிலங்களில் வாழ்ந்தனர்.
அந்த அடிமைகளுக்கும் விலங்குகளுக்கும் உயிரற்ற நுகர்வுப் பொருள்களுக்கும் அசையாச் சொத்துகளுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. அந்த அடிமைகள் யாவரும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கைப்பற்றிக் கப்பலில் ஏற்றிய கறுப்பு நிறக் காப்பிலி இனத்தவர்.
ஆண்டாராக வெள்ளையர், அடிமைகளாகக் கறுப்பர்; சவுக்குகளாக வெள்ளையர், அடிவாங்கும் முதுகுகளாகக் கறுப்பர். சொகுசு வாழ்வில் போர்வைகள் புத்தாடைகளுடன் வெள்ளையர், குளிரிலும் வெயிலிலும் ஆடையின்றிக் கறுப்பர்.
வேலை வாங்கலாம், கசையடி கொடுக்கலாம், துன்புறுத்தலாலம், பசியுடன் வாட விடலாம், விற்கலாம், ஈடு வைக்கலாம், ஏலமிடலாம், அன்பளிப்பாகக் கொடுக்கலாம், பண்ட மாற்றாக்கலாம். சட்டம் துணைநின்றது. வெள்ளையருக்கு மேல்நிலை, கறுப்பருக்கு இழிநிலை.
கல்வியூட்டலாகாது, தொழிற்பயிற்சி கூடாது, தத்துவப் போதனை தேவையில்லை, கேளிக்கை கிடையாது. வேலை...., வேலை...., விடுப்பில்லா வேலை அதற்குக் கூலி கிடையாது, அரை வயிற்றுக்குக் கஞ்சி, ஆண்டுக்கு இரு ஆடைகள், படுக்கப் போர்வையுமில்லை.
வட அமெரிக்காவின் தெற்கத்தைய மாநிலங்களின் வேளாண் பண்ணைகளில் இந்தக் கொடுமை, ஆனால் வட மாநிலங்களில் இக் கொடுமை குறைவு; சட்டமோ எங்கும் ஒன்றுதான்.
வெள்ளை ஆண்டானும் கறுப்புப் அடிமைப் பெண்ணும் பாலுறவு கொள்ளப் பிறந்தவர் பிரடெரிக்கு. மிகச் சிறு வயதிலேயே தாயைப் பிரிந்தவர், தந்தையைத் தெரியாதவர், வளர்ப்புப் பாட்டியுடன் வளர்ந்தவர். அடிமைக் கொட்டிலுக்குள் நடந்த அத்தனை அநியாயங்களுக்கும் சாட்சி.
இளைஞனாகு முன்பே பலமுறை கசையடி வாங்கி முதுகுத் தோலுரிந்தவர், உருட்டுக் கட்டை அடியில் இவரது மண்டை பிளந்தது, இடது கண் தேய்ந்தது, மாட்டிறைச்சித் துண்டால் கண்ணுக்கு மருத்துவம் செய்தவர்.
பண்ணையிலிருந்து மாற்றலாகி நகரக் குடும்பத்துக்கு அடிமையான விடலைப் பருவத்தில் களவாக எழுத்துகளை அறிந்தார், எழுதப் பழகினார், செய்தி இதழ்களைப் படித்தார், நூல்களைப் படித்தார், கிறித்தவ தத்துவத்தைப் படிக்க முயன்றார்.
அடிமை வாழ்வை வெறுத்தார், விடுதலை பெற்ற மனிதனாக முயன்றார், நண்பர்களுடன் விடுதலையாக முயன்று கைதானார், சிறையிருந்தார், பின்னர் தன்னந் தனியாகத் தப்பியோடி தெற்கத்தைய மாநிலங்களிலிருந்து நியுயோர்க்கு வந்தார். அங்கும் அவருக்குச் சோதனைகள்.
பண்ணையில் இருந்த நாள்களில் காதலித்த கறுப்பினப் பெண்ணை நியூயோர்க்குக்கு வரவழைத்துத் திருமணம் செய்து கொண்டார். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். நீண்ட காலம் இல்லறம் நடத்திய அவர், பிற்காலத்தில் நோயுற்ற மனைவி இறந்ததும் வெள்ளைக்காரப் பெண்ணை மணந்தார்.
சோதனைகளை மீறி, தன்னையொத்த விடுதலை வேட்கையாளருடன் சேர்ந்தார், நிறைய வாசித்தார், சிறந்த பேச்சாளராரனார், நிறைய எழுதினார், நோர்த் ஸ்ரார் இதழைத் தானே நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆபிரகாம் லிங்கனின் வெற்றிக்காக உழைத்தார். அடிமைகள் விடுதலை அறிக்கை வெளியாவதில் ஆபிரகாம் லிங்கனுக்கு உதவினார். 250 ஆண்டு கால அடிமைச் சட்டங்களைத் தகர்த்தெறிவதில் சக போராளிகளுடன் இணைந்த பிரடெரிக்கு டக்கிளசுவின் பங்களிப்பைப் பல நுல்கள் எழுதின, பாராட்டின.
கறுப்பின மக்கள் விடுதலை பெற்றது மட்டுமல்ல, வாக்குரிமை பெற்றனர், படையணிகளில் இணைந்தனர்.
இந்தப் போராளி, தனது இளமைக்கால அநுபவங்களை நூலாக்கினார். அந்த நூலே ஓர் அடிமையின் வரலாறு என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. சூத்திரதாரி மொழிபெயர்த்துள்ளார். தமிழினி வெளியிட்டுள்ளனர். இந்த நூலைத் தமிழில் வெளியிட ஊக்குவித்தவர் திலீப்குமார்.
தமிழர் அனைவரும் படிக்கவேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. திண்ணியத்தில் மலத்தை ஊட்டிய, தஞ்சாவூரருகே சிறுநீரை ஊட்டிய, குவளைகள் இரண்டைக் கடையில் தனித்தனி வைத்திருக்கிற தமிழகத்திலும், கோயிலுக்குள் வழிபடப் புகமுடியா மக்கள் இன்னமும் வாழும் ஈழத்திலும் இந்த நூல் அத்தகைய கொடுமையாளரின் கண்களைத் திறக்கக் கூடும். பிறப்பொக்கும் என வள்ளுவர் சொன்னதைக் கேட்காதவரின் இரத்தமும் உறையும் நிகழ்வுகளை பிரடெரிக்கு இந்த நூலில் விவரித்துள்ளார்.
மனிதரின் மிகக் கேவலமான இயல்புகளின் வெளிப்பாடுகளை அமெரிக்காவில் 150 ஆண்டுகளின் முன்னர் சட்டத்தின் துணை கொண்டு நிகழ்த்திய வரலாறு, வருணாசிரம நெறிகளுக்கு அப்பாற்பட்டதல்ல. நிற(வருண)பேதத்தின் கொடுமைகளைப் பல்லாயிரமாண்டுகளாக அனுபவித்து வரும் தெற்காசிய மக்கள், வட அமெரிக்காவில் 250 ஆண்டுகள் நடந்த கொடுமைக்கு முடிவு கட்டியதை எடுத்துக்காட்டாக்க வேண்டும். இந்த நூல் அதற்கு உதவும்.
ஆங்கில வாசகரை நோக்கிக் கடந்த நூற்றாண்டில் எழுதிய நூல். விரைந்து படிக்கக் கூடியதாகத் தமிழ் நடை அமைந்து, சிறு சிறு பந்திகளாக வாசித்துப் பழகி வரும் இக்காலத் தமிழ் வாசகருக்கு, மொழிபெயர்ப்பாளரின் நீண்ட பந்திகள் பொறுமையைச் சோதிப்பன. பெயர்ச் சொல் ஒலிபெயர்ப்பில், வாக்கிய மொழியியலில், உரை நடையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். மணிப்பிரவாளத்தைத் தூக்கி எறிந்த தமிழர், தமிங்கிலத்தைத் தூக்கி எறிவதில் காலத்தை விரயமாக்கில் வளர்ச்சியில் பின் தங்குவர். மணிப்பிரவாளமும் தமிங்கிலமும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள்.
மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்க மாநில அரசுகளுக்கு அடித்தளமில்லை. அனைத்துலகையும் ஆங்கிலேய வெள்ளையரின் மேலாதிக்கத்துள் கொண்டுவருவதற்கு இன்றைய உலகமயமாக்கல் போர்வையாகிறது. இந்த நூல் அந்தப் பின்னணியைத் தெளிவாக்குகிறது.

நீர்மையும் உவர்மையும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கண்ணீரை நாக்கில் விட்டுப் பாருங்கள். உப்பு உறைக்கும். வியர்வையிலும் உப்பு உண்டு.
கடல் நீரிலும் உப்பு உண்டு. கடல் நீர் உப்பாக இருப்பதன் காரணம் என்ன? சிங்கள மேலாட்சியின் கொடுமைகளைத் தாங்காத ஈழத்தமிழர் வடித்த கண்ணீர் கடலில் கலந்ததால், கடல் நீர் உப்பாக உள்ளதாம்; சொன்னவர் அறிஞர் அண்ணா. இலக்கிய நயத்துடன் கூறிய இவ் வரிகள், தன் உடன் பிறப்புகளின் எல்லையற்ற கடும் துன்பத்தை விளக்க அறிஞர் அண்ணா கூறிய வரிகள்.
கடல் நீரைச் சூடாக்கினால் நீர் ஆவியாகும்; உப்பு எஞ்சி நிற்கும். கோடை காலத்தில், கடற்கரை அருகே, வரப்புகளை அமைத்து, வயல்களாக்கி, அதற்குள் கடல் நீரை இறைத்து, சூரிய வெப்பத்தில் காய விட்டால், நீர் ஆவியாகும்; வயல் முழுவதும் உப்புப் படியும்; உப்பளங்களில் இவ்வாறு உப்பை விளைவிக்கிறார்கள்.
உலகின் மொத்தப் பரப்பளவில் 77% கடற் பரப்பு. எஞ்சியதே நிலப் பரப்பு. நிலத்திலிருந்து படிப்படியாக ஆழம் அதிகரித்து, மிக ஆழமான பகுதிகளைக் கொண்டதே கடல்.
கரையோரக் கடல் ஆழம் குறைந்தது, நெடுங்கடல் ஆழம் நிறைந்தது.
கரையோரக் கடலும் பல்வகையின. நிலத்தில் ஒறுவாய் ஏற்பட, கடல் நீர் உள்புகும். நிலத்திலிருந்து வடியும் நீரும் அந்த ஒறுவாயுள் சேரும். இத்தகையனவற்றை, ஆற்றுவாய் எனவும், கழிமுகம் எனவும், களப்பு எனவும், கடனீரேரி எனவும், குடாக்கடல் எனவும், உட்கடல் எனவும் பல்வேறு பெயரிட்டு அழைப்பர்.
அருகருகே உள்ள நிலப்பரப்புகள்; அந்த நிலப்பரப்புக்கு இடையே ஆழம் குறைந்த கடல்; நீரால் இணைக்கப்பெற்ற நிலப்பரப்புகள்; அந்தக் கடலை நீரிணை என்பர், கால்வாய் என்பர். இந்தியாவின் பெரிய நிலப்பரப்பு, தெற்கே இலங்கைத் தீவு; இந்திய நிலப்பரப்புக்குத் தென்கிழக்கே, இலங்கைத் தீவுக்கு வடமேற்கே, ஆழமற்ற கடல் இரு நிலப்பகுதிகளையும் இணைக்கிறது. அந்தக் கடலே பாக்கு நீரிணை. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒடுங்கும் கடல் ஆங்கிலக் கால்வாய்.
நெடுங்கடலுடன் ஒரு திக்கில் குறுகிய, ஆனால் நேரடித் தொடர்புடைய, ஏனைய மூன்று திக்குகளும் நிலப்பரப்பு வளைத்துள்ள கடல், வளைகுடா. தூத்துக்குடிக் கரை அல்லது கீழக்கரை மேற்காக, சேதுத் திடல் தொடர் வடக்காக, இலங்கையின் புத்தளம் - கற்பிட்டிக் கரையோரம் கிழக்காக வளைந்து, தெற்கே இந்தியப் பெருங்கடலுடன் நேரடித் தொடர்புள்ள குடாக் கடல், மன்னார் வளைகுடா. அவ்வாறே பாரசீக வளைகுடா, மெக்சிகன் வளைகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், அகன்று விரிந்த திக்கில் நெடுங்கடலுடன் நேரடித் தொடர்புடையதாய், எஞ்சிய திக்குகள் நிலப்பரப்பை ஒட்டியதாய் உள்ள கடல் விரிகுடா. இந்தியத் துணைக்கண்டம் மேற்கே, மலாயாக் குடாநாடு கிழக்கே, இந்தியப் பெருங்கடலுள் விரியும் கடலே வங்காள விரிகுடா. அவ்வாறே பிஸ்கே விரிகுடா போன்றன.
பரப்பளவில் பெரியதாய், ஆழத்தில் அதிகமாய், நிலப்பகுதிகளை ஒட்டியும் நெடுங்கடலோடு நேரடித் தொடர்புடையதான பரந்த, விரிந்த நீர்த்தொகுதியே கடல்; இதனைச் சிறுகடல் என்பாரும் உண்டு. இந்தியாவுக்கு மேற்கே, அரேபியக் குடாநாட்டுக்குக் கிழக்கே உள்ளது அரபிக் கடல். அவ்வாறே அந்தமான் கடல், பிலிப்பைன்ஸ் கடல் போன்றன.
ஆற்றுவாய் தொடங்கி, சிறுகடல் ஈறாக உள்ள நீர்த் தொகுதிகளுக்குத் தாயான நீர்த்தொகுதியே நெடுங்கடல். உலகின் பரப்பில் நான்கு நெடுங்கடல்கள் உள. அவற்றைப் பெருங்கடல் என இன்று அழைப்போம். இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அத்திலாந்திக் பெருங்கடல், ஆர்க்ரிக் பெருங்கடல் என்பன அவை.
ஆழம், இருக்குமிடம், பரப்பு, விரிவு போன்ற தன்மைகளில் வேறுபடுவதால் வெவ்வேறு பெயர்கள். ஆனாலும் ஒரே இயல்பான உப்புத்தன்மை கொண்ட நீரே இந்த நீர்த் தொகுதிகளில் உள்ள நீர்.
கடலில் உப்பும் உண்டு, நீரும் உண்டு, இவை இரண்டும் வேறறக் கலந்துள்ளன. ஆனாலும் கடலை உப்பு என யாரும் அழைப்பதில்லை. கடலை நீர் எனவே அழைப்பர். ஏனெனில் கடலில் கண்ணுக்கு நீர் தெரிகிறது, கரைந்த உப்புத் தெரிவதில்லை. நாக்கில் கடல் நீரை விட்டால், நீர்மையும் (நீர்த் தன்மை) தெரியும், உவர்மையும் (உப்புத் தன்மை) தெரியும்.
கடல் அனைத்தும் ஒரே தன்மைத்தான உவர் நீரே எனப் பார்வைக்குத் தோன்றும். மெய்நிலை அதுவல்ல. ஆற்றுவாய் தொடக்கம் நெடுங்கடல் வரை, கடலின் நீர்மை அல்லது உவர்மை படிப்படியாக மாறுகிறது.
நிலத்தை ஒட்டிய கடலோரக் கடலில், நிலத்திலிருந்து வடியும் நீர் - நன்னீர் - கடலுடன் கலக்கிறது. பனிப்பாறை உருகுவதால், மழை பெய்வதால் நிலத்தில் ஆறுகளாகும் நன்னீர், மலைகளிலிருந்து பள்ளத்துக்கு வந்து, கடற்கரைக்கு வந்து கடலுடன் கலக்கிறது. கடலுக்கு மேலேயே மழை பெய்கிறது.
கடலுள் உவர் நீர், நிலத்திலிருந்து வருவதோ நன்னீர். உவர் நீரில் உப்பின் கரைசல் அதிகம்; நன்னீரில் உப்பின் கரைசல் மிகமிகக் குறைவு.
மிகக் குறைந்த உவர்மை கொண்ட நன்னீரும் நாக்கில் கரிக்குமளவு உவர்மை செறிந்த கடல் நீரும் கலந்தால், கலக்கும் இடத்தில் கடலில் நீர்மை அதிகரிக்கும், உவர்மை குறையும். ஆனாலும் கடலின் கிடக்கை நீரோட்டம் இந்த நீர்மை நிறைந்த நீரை, உவர்மை நிறைந்த ஆழப் பகுதிக்குள் சேர்த்துவிடும்.
தொடர்ச்சியாக நன்னீர் கடலுக்குள் கலப்பதும், அந்த நன்னீரை ஆழ்கடலுள் கிடக்கை நீரோட்டம் எடுத்துச் செல்வதும் வழமை. இந்த வழமையால், கரையிலிருந்து படிப்படியாகக் கடல் நீரின் நீர்மை குறைய, உவர்மை அதிகரிக்கும். கரையோரத்தில் அதிக நீர்மை, ஆழ் கடலில் குறைந்த நீர்மை; படிப்படியாகக் குறையும் நீர்மை, ஆழ்கடலில் மாறாத அளவைக் கொண்டிருக்கும்.
எப்படி? ஏன்? கடலின் மேற்பரப்பிலிருந்து தொடர்ச்சியாகப் பகல்நேரம் முழுவதும் அதிக அளவிலும், இரவு நேரத்தில் குறைந்த அளவிலும் நீர் ஆவியாகிறது. சூரிய வெப்பமும், காற்றின் வெப்பமும் இந்த கடலின் மேற்பரப்பு நீரை ஆவியாக்குகின்றன.
ஒரு வழியால் நிலத்து நன்னீர் கடலுள் கரைகிறது. மறுவழியால் கடலின் நீர் ஆவியாகி வெளியேறுகின்றது. இந்த வரவு செலவுக் கணக்கில், வரவால் கடல் பெருகுவதுமில்லை, செலவால் கடல் வற்றுவதுமில்லை. கடலின் நீர்க் கொள்ளளவு மாறாதுள்ளது, கடலின் மட்டமும் மாறாதுள்ளது.
நிலத்து நன்னீருடன் மிகமிகச் சிறிய அளவில் உப்புக்கள் கடலுள் வருகின்றன. இந்த உப்புக்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஊட்டமாகின்றன. ஆனாலும் கடல் வாழ் உயிரினங்களின் உப்புத் தேவையை ஈடு செய்ய நிலத்திலிருந்து நீருடன் வரும் உப்பின் அளவு போதாது. தொடர்ச்சியாக ஆழ்கடலில் நடைபெறும் குத்து நீரோட்டம், கடலின் ஆழ் தரையிலிருந்து உப்புக் கரைசலை மேல் நோக்கி அள்ளிக்கொண்டு வருகின்றது. தொடர்ச்சியான இந்தக் கலக்கல் கடல் வாழ் உயிரினங்கலுக்கு ஊட்டமாக மட்டுமல்ல, நெடுங்கடலின் உவர்மையையும் மாறாது பேணுகின்றது.
100 கிராம் நீரில் 3.5 கிராம் உப்புக் கரைந்திருந்தால் 3.5% உவர்மை என்கிறோம், 96.5% நீர்மை என்கிறோம். நெடுங்கடலின் மாறாத நீர்மை 96.5%.
நிலத்திலிருந்து 99.999% நீர்மையுடன் கடலுக்குள் கலக்கும் நன்னீர், கரையோரக் கடலில், கழிமுகத்தில், களப்புக் கடலில் 99% -98% நீர்மையுடையதாகின்றது. வளைகுடாக் கடலிலோ விரிகுடாக் கடலிலோ 97% - 96% ஆகிறது. சிறுகடலிலோ, கடலிலோ 96.3% நீர்மையாகி, நெடுங்கடலுள் 96.5% நீர்மையுடன் நிலைக்கிறது.
கடற்கரையிலிருந்து கடலுள் போகப் போக, படிக்கட்டுகளாகக் குறையும் நீர்மை, நெடுங்கடலில் மாறாதிருக்கின்றது.
மழை பெய்கிறது, நிலத்து நீர் கடலுள் பாய்கிறது, கடலின் மேற்பரப்பு நீராவியாகிறது, இந்தச் சுழற்சியால் நெடுங்கடலின் நீர்மை 96.5% ஆக நிலைத்திருக்கிறது. கரையோரக் கடல்களில் 99% இலிருந்து 96.3% ஆகக் குறைந்து கொண்டிருக்கும் நீர்மை, நெடுங்கடலில் மாறாது 96.5% ஆக இருக்கிறது.
நெடுங்கடல் - கரையோரக் கடல்களல்லாத ஆழ்கடலான நெடுங்கடல்; உம் - மாறாத நீர்மை கொண்ட அத்தகைய கடலும் (உம்மை, நெடுங்கடலின் தனித்தன்மையைக் காட்டும்); தன் நீர்மை குன்றும் - தனது மாறாத நீர்மை அளவிலிருந்து குறையும், (96.5%நீர்மை குறைந்து 95% ஆகலாம்); தடிந்தெழிலி - கடலிலிருந்து நீராவியாகிக் காரான மழை மேகங்கள்; தான்நல்கா தாகி விடின் - நல் மழையைப் பொழியது விடின்.
2000 ஆண்டுகளுக்கு முன், தமிழில் கடலியல் கலைச் சொல்லான நீர்மையைத் தந்த திருவள்ளுவர், அறிவியல் கருத்தை அழகான குறள்வெண்பாவாக ஏழு சீர்களில் இரு வரிகளில் அமைத்துத் தந்துள்ளார்.
நெடுங்கடலுந் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்கா தாகிவிடின் குறள் 17.


உணவின் தீ அளவு தெரிந்துண்க

ஒரு கிராம் நீர். அதை ஒரு பாகை செல்சியசு உயர்த்த வேண்டும். அதற்கு எவ்வளவு தீ வேண்டும்? ஒரு குக்கலோரி தீ போதுமானது.
30 பாகை செல்சியசில் உள்ள ஒரு கிராம் நீரை 100 பாகை செல்சியசுக்கு உயர்த்தி நீராவியாக்க 70 குக்கலோரி தீ வேண்டும்.
தீயை அளக்கும் அலகு குக்கலோரி.
ஓராயிரம் குக்கலோரி தீ சேர்ந்தால், ஒரு கலோரி.
தீயின் அளவைப் பார்த்தோம். சத்தியின் வெளிப்பாடு தீ. வலிமையின் வெளிப்பாடு தீ. ஆற்றலின் வெளிப்பாடு தீ. அந்த ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
உணவில் இருந்து ஆற்றலை உடல் பெறுகிறது. உணவில் ஆற்றல் தோன்றாதிருக்கிறது. குடலுக்குள் போனதும் உணவு செரிமானமாகிறது. செரிமானமான பின்னர் உடலின் தேவைக்காகப் செரிமான உணவை மூச்சு வாயு உடைக்கிறது. ஆற்றல் வெளிவருகிறது. அந்த ஆற்றலே உயிரை வாழ்விக்கிறது.
உணவுக்குள் இருக்கும் தோன்றா ஆற்றலை மூச்சு வாயு உடைத்துத் தோன்றும் ஆற்றலைக் கொடுப்பதால் உயிர் வாழ்கிறது.
உயிர் வாழ ஆற்றல் தேவை. எனவே மூச்சு வாயு தேவை, உணவும் தேவை.
உணவில் உள்ள ஆற்றலை அளக்கும் அலகு கலோரி.
தூங்கும் போதும் ஆற்றல் தேவை, உழைக்கும் போதும் ஆற்றல் தேவை. ஒவ்வொரு நிலையிலும் எவ்வெவ்வளவு ஆற்றல் தேவை என்பதைக் கணக்கிடலாம்; ஒரு மனிதருக்கு ஒரு மணி நேரத்துக்கு எத்தனை கலோரி ஆற்றல் தேவை எனக் கணக்கிடலாம்.
தூங்குகையில்... 80
உட்கார்ந்திருக்கையில்... 100
வீட்டு வேலைகளே செய்கையில்... 180
மெதுவாக நடக்கையில்... 220
வேகமாக நடக்கையில்... 480
ஓடுகையில்... 1000
மெதுவாக ஓடுகையில்... 600
மெதுவாக ஈருருளி ஓட்டுகையில்... 360
வேகமாக ஈருருளி ஓட்டுகையில்... 540
மெதுவாக நீந்துகையில்... 300
வேகமாக நீந்துகையில்... 400
பூப்பந்து விளையாடுகையில்.. 350
மேசைப் பந்து விளையாடுகையில்.. 360
இதற்கேற்ற உணவுதான் உயிர் வாழத் தேவை. எனவே நமக்குக் கிடைக்கும் உணவு வகைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை கலோரி இருக்கிறது எனத் தெரிந்து கொண்டால், அதற்கேற்ப அளவாக நாம் உணவை உட்கொண்டால், நலமாக உயிர் வாழலாம். ஒரு கிலோ உணவில் எத்தனை கலோரி எனத் தெரிந்தால் அதற்கமையத் தேர்ந்து சமைக்கலாம், உட்கொள்ளலாம்.
தானிய வகைகள் - அரிசி, கோதுமை போன்றன... 3,500
பருப்பு வகைகள் - துவரை, பயறு, மூக்குக் கடலை போன்றன... 3,500
காய்கறி - கத்தரி, வெண்டை, பாவல், அவரை போன்றன... 1,000
காய்கறி - கெக்கரி, தக்காளி போன்றன.. 200
காய்கறி - கீரை வகைகள்.. 300
பழங்கள் - 800
இறைச்சி வகைகள்.. 2,000
பால், பால் தரும் பொருள்கள்... 700
சமையல் எண்ணெய் வகைகள்... 9,000
உணவின் ஆற்றல் அளவுகளைக் கண்டோம். உயிர் வாழத் தேவையான ஆற்றல் அளவுகளையும் கண்டோம்.
அளவோடு உணவை உட்கொண்டால் வளமாக நலமாக வாழலாம்.
உணவில் உள்ள ஆற்றலின் அளவை, தீயின் அளவை, கலோரியின் அளவைத் தெரிந்து ஒருவர் உணவுண்ண வேண்டும். அந்த அளவைக் கவனத்தில் கொள்ளாமல், அளவுக்கு மேலாக ஒருவர் உணவை உட்கொண்டால், உணவுக் குழாயில், குருதி ஓட்டத்தில், இதயத்தில், சிறுநீரகத்தில், ஈரலில், உடலின் பிற உள்ளுறுப்புகளில் சம காலத்தில் நோய்கள் வரும். உடலின் எடை தேவைக்கு அதிகமாக உயரும்.
கலோரியின் அளவைத் தெரிந்து அளவோடு உண்ணுங்கள் என 2000ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவப் பெருந்தகை கூறிச் சென்றுள்ளார். மேலே கூறிய மிக விளக்கமான அறிவியல் கொள்கையை இரண்டே வரிகளில், ஏழே ஏழு சீர்களுள் அடக்கி, குறள் வெண்பாவாகத் தந்துள்ளார்.
தீ அளவன்றித் தெரியான் - கலோரி அளவுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாது, பெரிதுண்ணின் - தேவையான கலோரிக்கு மேலாக உணவை உண்ணும் ஒருவர், நோயளவின்றி - உடலின் அனைத்து உறுப்புகளிலும் எண்ணற்ற நோய்கள் வந்து, படும் - துன்புறுவர், இறப்பர்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும் -குறள் 947